டெல்லி: ராதாபுரம் சட்டசபை தொகுதி தேர்தல் வழக்கு விசாரணையை மார்ச் 16ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

2016ம் ஆண்டு தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் அப்பாவு, தம்மை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பதுரையை விட 49 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை தழுவினார்.

இதையடுத்து, இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.மனுவில் 203 தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை என்றும், சில சுற்றுகளில் எண்ணப்பட்ட வக்குகளில் முறைகேடு நடைபெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வாக்குப்பதிவு எந்திரங்களில் 19, 20, 21 ஆகிய 3 சுற்றுகளில் பதிவான வாக்குகள் மற்றும் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டது.

அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்தது. இதனிடையே, மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் அதிமுக எம்எல்ஏ இன்பதுரை வழக்கு தொடர்ந்தார். ஆனால் உச்ச நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டதோடு,முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது.

இந் நிலையில் ஒத்தி வைக்கப்பட்டிருந்த விசாரணை இன்று நடந்தது. அப்போது, ராதாபுரம் தொகுதியில் எண்ணப்பட்ட மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதி மன்ற பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணை மார்ச் 16ம் தேதி நடைபெறும் என்றும் கூறி அன்றைய தினத்துக்கு வழக்கை ஒத்திவைத்தது.