டில்லி:

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என  திமுகவின் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்த விவகாரத்தில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட வில்லை என்ற குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, இன்பதுரை வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், செல்லாது என அறிவிக்கப்பட்ட 203 தபால் வாக்குகளையும், 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி வாக்குகளும் எண்ணப்பட்டன.

இதற்கிடையில்,  உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ இன்பதுரை உச்சநீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம்,  மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க  மறுத்து விட்ட நிலையில், மறு வாக்கு எண்ணிக்கை முடிவை 23ந்தேதி வரை வெளியிட தடை விதித்து வழக்கை ஒத்தி வைத்தது.

இந்த நிலையில்,  ராதாபுரம் தேர்தல் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென்ற திமுக தரப்பில் உச்சநீதி மன்றத்தில் இன்று  கோரிக்கை விடுக்கப்பட்டது. திமுக வேட்பாளர் அப்பாவு கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்  வழக்கு பட்டியலிட்ட பிறகே விசாரணைக்கு ஏற்கப்படுமென உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.