சென்னை: நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை வேளச்சேரி தொகுதியில், வேளச்சேரியில்  ராதிகா சரத்குமார் போட்யிடுவார் என சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த சமத்துவ மக்கள் கட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கிருந்து விலகி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் இணைந்தது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள திரவியபுரத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் 6 ஆவது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் முதல் நிகழ்வாக கட்சியின் தேர்தல் நடைபெற்றது.  இந்த  கூட்டத்தில் சரத்குமார் மீண்டும் தலைவராகவும் பொது செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். முதன்மை துணைப் பொதுச்செயலாளராக ராதிகா சரத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.  பொருளாளராக A.N. சுந்தரேசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். தேர்வு செய்யப்படவர்கள் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டனர்.

அதன் பின்னர் முதன்மை துணை பொதுச் செயலாளர் ராதிகா சரத்குமார் குத்து விளக்கேற்றி 6வது பொதுக்குழுவினை தொடங்கி வைத்தார். பொதுகுழு கூட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பல்லாயிரகணக்கான கட்சி தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

பொதுக்குழு கூட்டத்தில பேசிய  ராதிகா சரத்குமார், ‘சரத்குமாருக்கு பயம் கிடையாது. அன்பு ஒன்றுக்கு மட்டுமே அவர் கட்டுப்படுவார். தொண்டர்கள் காட்டும் அன்பில் சாதிப்போம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார். நிறைய முடிவுகள் எடுத்துள்ளார். அதுகுறித்து விரைவில் அறிவிப்பார்.

இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை கொண்டுவரும் என அடித்துக்கூறுகிறேன்.விடமாட்டோம்… என்ன கருவேப்பிலையா கொத்தமல்லியா. பயம் எங்களுக்குக் கிடையாது. அன்பு ஒன்று மட்டும்தான் இருக்கிறது. அவர் கட்டளையிட்டால் கண்டிப்பாக இந்தத் தேர்தலில் நிற்பேன். நிறைய பேர் நான் கோவில்பட்டியிலும், வேளச்சேரியிலும் போட்டியிட வேண்டும் எனக் கூறியுள்ளனர். ஆனால் கடவுள் (சரத்குமார்) என்ன நினைக்கிறார் எனத் தெரியவில்லை. எனக்கும் கடவுள் அவர்தானே”. தலைவர் கட்டளையிட்டால் இந்த தேர்தலில் வேட்பாளராக நிற்பேன் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து,   வரும் சட்டமன்ற தேர்தலை மக்கள் நீதி மய்யம் மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார்  அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து  பேசிய சமத்துவ மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் விவேகானந்தன், சென்னை வேளச்சேரி தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என தெரிவித்தார்.

தற்போது வேளச்சேரி தொகுதியில் திமுகவின்  நடிகை வாகை சந்திரசேகர் எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.