டில்லி:

ஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை நாடாளு மன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

ரஃபேல் விமான கொள்முதலில் முறைகேடுகள் நடந்ததாக காங்கிரஸ் கட்சி உள்பட  எதிர்க்கட்சி கள் அரசை கடுமையாக  குற்றம் சாட்டி வருகின்றன.  கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பிரான்ஸ் நாட்டில் இருந்து ரஃபேல்  போர்  விமானங்கள் வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு விமானத்தின் விலை 526 கோடி ரூபாய் என  விலை நிர்ணயிக்கப்பட்டது. . அதன்பின் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து பாஜக அரியணையில் ஏறியது.

அதையடுத்து, பாஜக ஆட்சியில் அதே ரஃபேல் விமானத்தின் விலை 1,640 கோடி ரூபாய் என்று விலை பேசப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது. இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அனில் அம்பானியின் நிறுவனம் பெரும் லாபம் அடைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

ரஃபேல் விமானங்களை வாங்குவதில் விதிமுறைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக பிரதமர் மோடி மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.  ஆனால் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த நிலையில் ரஃபேல் விமானங்கள் ஒப்பந்தம் குறித்துமத்திய கணக்கு தணிக்கை அதிகாரி ராஜீவ் மகரிஷி தணிக்கை செய்தார். இந்த தணிக்கை செய்யப்பட்ட அறிக்கை நாடாளு மன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் தேசத்தின் பாதுகாப்பு கருதி விமானத்தின் விலை குறித்த தகவல்கள் வெளியிடப்படாது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.