பாரிஸ்: ரோலண்ட் கேரஸ் ஃபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 90வது வெற்றியைப் பெற்ற நடப்பு சாம்பியன் ரஃபேல் நாடல், காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ஃபிரெஞ்சு ஓபனில் அவர் காலிறுதிக்கு முன்னேறுவது இது 13வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, 38வது முறையாக கிராண்ட் ஸ்லாம் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஸ்பெயின் நாட்டு வீரரான நாடல், காலிறுதியில் ஜப்பான் நாட்டின் கெய் நிஷிகோரி அல்லது ஃபிரான்ஸ் நாட்டின் பெனாய்ட் பேய்ர் ஆகிய இருவரில் ஒருவரை எதிர்கொள்வார்.

“கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் மற்றொரு காலிறுதியில் விளையாடுவது நம்ப முடியாத அனுபவத்தைக் கொடுக்கிறது. இது எனது விளையாட்டு வாழ்க்கையின் ஒரு முக்கியமான தருணம்” என்றுள்ளார்.

ஃபிரெஞ்சு ஓபன் போட்டியில் இதுவரை இரண்டு தடவைகள் மட்டுமே ரஃபேல் நாடல் வீழ்த்தப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.