டில்லி:

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் நற்சான்று எனக்கு தேவையில்லை என்று, ரஃபேல் குறித்து பரபரப்பு கட்டுரை வெளியிட்ட  தி  ‘இந்து’ நாளிதழ் ஆசிரியர் என்.ராம் கூறி உள்ளார்.

ஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. மோடி அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ள ரஃபேல் விவகாரம் குறித்து புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில்  நாடாளுமன்றமே ஸ்தம்பித்து போகும் வகையில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்து ஆங்கில பத்திரிக்கையில் ரஃபேல் குறித்து பரபரப்பு  கட்டுரை வெளியானது.

கட்டுரையை எழுதிய இந்து பத்திரிகை குரூப் தலைவரும், ஆசிரியருமான என்.ராம்,  ரபேல் விமான பேரத்தில் பாதுகாப்பு அமைச்சகம் பேச்சு வார்த்தை நடத்தும்போதே பிரதமர் அலு வலகம் தனியாக குறுக்கீடு செய்து பேச்சு வார்த்தை நடத்தியதையும், அதுகுறித்து  பிரதமர் அலுவலகம் 2015-ல் ஒரு கடிதம் எழுதிய கடிதத்தையும் வெளியிட்டது.

மோடியின் முடிவால் 36 ரபேல் போர் விமானங்கள் ஒவ்வொன்றின் விலையும் 41 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும்  ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக பேச, இந்திய பேச்சுவார்த்தை குழுவிற்கு பதிலாக பிரதமர் அலுவலகமே பிரான்ஸ் அரசோடு பேச்சுவார்த்தை நடத்தியிருக் கிறது. பிரான்ஸ் உடனான பேச்சுவார்த்தையின் போது பிரதமர் அலுவலகத்தின் தலையீட்டை பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் எதிர்த்தனர் என்றும், ஆனால், உச்சநீதி மன்றத்தில் ரஃபேல் வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றபோது, பிரதமர் அலுவலக கடிதம் மற்றும் பிரதமர் அலுவலகம் பேச்சுவார்த்தை நடத்திய விவரங்கள் இடம்பெறவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த கட்டுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடிகளை கொடுத்து வருகின்றன. இந்து நாளிதழ் செய்தியை குறிப்பிட்டு ரபேல் ஒப்பந்தத்தில் காவலாளி தான் திருடன் என்பது நிரூபணம் ஆகிவிட்டது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.

பாஜகவோ ராமின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று மறுத்து வருகிறது. இதற்கு பதில் அளித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர்  நிர்மலா சீத்தாராமன், ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து வருவதாகவும்,  “ரபேல் ஒப்பந்த விவகாரத்தை மீடியா தகவலின்படி எழுப்புவது இறந்த குதிரையை சாட்டையை கொண்டு அடிப்பது போன்றது,” என  கூறினார்.

மேலும், அம்பானிக்கு ரூ. 30 ஆயிரம் கோடியிலான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என ராகுல் விமர்சனம் செய்வதை, “இது மிகவும் ஆபத்தானது, பாதுகாப்பு படைகளை உடைக்க முயற்சி செய்து வருகிறாரா?” என கேள்வியை எழுப்பினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்து ராம்,  ரஃபேல் தொடர்பான பிரச்னைகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சரிகட்ட பார்க்கிறார் ; ரஃபேல் ஒப்பந்தத்தில் ஈடுபடாத நிர்மலா சீதாராமன் ஏன் சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்? என்று கேள்வி எழுப்பி யுள்ளார்.

நிர்மலா சீதாராமனிடமிருந்து தனக்கு  எந்த நற்சான்றும் எனக்கு தேவையில்லை என்றும் “இந்த விஷயத்தில் மனோகர் பாரிக்கரின் பாத்திரத்தை நாங்கள் கையாளவில்லை என்பதாலேயே இத்துடன் இது முடிகிறது என்று  ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில்   இந்து என்.ராம் கூறி உள்ளார்.