பார்சிலோனா: ஜோகோவிக்கிற்கு அதிர்ஷடம் இல்லை போலும்; அவருக்காக நான் வருத்தப்படுகிறேன் என்றுள்ளார் மற்றொரு முன்னணி வீரர் ரஃபேல் நாடல்.

சமீபத்தில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், 4வது சுற்றில் விளையாடிய உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிக், பந்தை பின்னால் அடித்து, அது நடுவர் ஒருவரின் கழுத்தை தாக்கியதால், போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால், அவரின் கிராண்ட்ஸ்லாம் கனவு தகர்ந்தது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள நாடல், “ஜோகோவிக்கிற்காக வருந்துகிறேன். விதிகள் தெளிவாகவே உள்ளன. ஆனால், பாவம் அவருக்குத்தான் அதிர்ஷ்டம் இல்லை. கோப்பையை வெல்லும் வாய்ப்பு அவருக்கு அதிகம் இருந்தது.

மைதானத்தில் எப்போதும் நிதானமும் சுயக்கட்டுப்பாடும் வேண்டும். இல்லையெனில், இப்படியான துரதிருஷ்டம்தான் நிகழும்” என்றுள்ளார் அவர்.