பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார் ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நாடல்.
உலக நம்பர் -1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிக்கை வீழ்த்தி சாதித்துள்ளார் நாடல். இந்த வெற்றியோடு சேர்த்து, மொத்தம் 13வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார் நாடல்.
இந்த வெற்றியின் மூலம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் என்ற ரோஜர் ஃபெடரரின் சாதனையை சமன் செய்துள்ளார் நாடல்.
களிமண் கோர்ட்டில் விளையாடுவதில் வல்லவரான 34 வயது நாடல், ஜோகோவிக்கை தொடக்கம் முதலே திணறடித்தார். மொத்தம் 2 மணிநேரங்கள் 43 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியை, 6-0, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வென்றார்.
இதற்கு முன்னதாக, மார்கரெட் கோர்ட்(24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்), செரினா வில்லியம்ஸ்(23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்) மற்றும் ஸ்டெபி கிராஃப்(22கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்) என்ற மூன்று பெண்கள் ஒற்றையர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர்கள்.
இவர்களுக்கு அடுத்து, ரோஜர் பெடரர் மற்றும் ரஃபேல் நாடல் ஆகிய 2 ஆண்கள் 20 ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர்.