நியூயார்க்: வாஷிங்டன் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐஎம்எஃப் என்று சுருக்கமாக அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் என்ற புதிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்.

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி சீர்குலைவை வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் எதிர் கொள்ள வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், ஐஎம்எஃப் அமைப்பிற்கு பல்வேறு வகையான ஆலோசனைகளை வழங்குவதற்காக மொத்தம் 11 பேர் கொண்ட குழுவை ஐஎம்எப் அமைப்பின் தலைவர் கிறிஸ்டியனா ஜார்ஜிவா நியமித்துள்ளார்.

இதில் முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் இடம் பெற்றுள்ளார். இவர் தற்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இக்குழுவில் சிங்கப்பூர் அமைச்சர் சண்முகரத்னம், கிறிஸ்டின் போர்பஸ், ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கேவின் ரூத், மார்க் மெல்லோக் ப்ரளென் உள்ளிட்டோரும் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.