புதுடெல்லி: அஜின்கியா ரஹானே ஒரு புத்திசாதுர்யமுள்ள கேப்டன் என்று புகழ்ந்துரைத்துள்ளார் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

அதேசமயம், நிரந்தர கேப்டன் விராத் கோலியுடன், ரஹானேவை ஒப்பிட்டுள்ள ரவி சாஸ்திரி, “விராத் கோலி எளிதில் உணர்ச்சிவயப்படும் ஒரு கேப்டன். ஆனால், ரஹானேவோ அமைதியான சுபாவம் கொண்ட கேப்டன்.

அவர் ஆட்டத்தின் போக்கை நன்றாக கணித்து செயல்படக்கூடியவர். அவரின் அமைதியான சுபாவம், அணியில் புதிதாக நுழைவோர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு நன்றாக உதவக்கூடியது. உமேஷ் யாதவ் காயத்தினால் வெளியேறியபோதும் ரஹானே எந்தப் பதற்றத்தையும் வெளிக்காட்டவில்லை.

விராத் கோலி மற்றும் ரஹானே இருவருமே ஆட்டத்தின் போக்கை நன்றாக அவதானிக்கக் கூடியவர்கள். ஒருவர் ஆக்ரோஷமானவர் மற்றும் இன்னொருவர் அமைதியானவர். இதுதான் இருவருக்கிடையிலான வித்தியாசம்” என்றுள்ளார் ரவி சாஸ்திரி.