புதுடெல்லி:

இளம் கிரிக்கெட் பயிற்சி வீரர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பு பெறுவதற்கான பயிற்சியை ராகுல் திராவிட் அளிக்கவுள்ளார்.


இந்தியாவின் ஜுனியர் பிரிவின் பயிற்சியாளராக ராகுல் திராவிட் இருக்கிறார். பயற்சி பெறுவதோடு அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டத்தை ராகுல் திராவிட் முன்மொழிந்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். இளம் வீரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதனை செயல்படுத்த வாரியத்தின் அதிகாரிகள் பணியாற்றி வருவதாக, தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமைச் செயலாக்க அதிகாரி துபான் கோஷ் தெரிவித்தார்.

இதன்மூலம் இளம் கிரிக்கெட் பயிற்சி வீரர்களுக்கு, கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில், அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், வேலை தரும் நிறுவனங்களை தொடர்பு கொண்டிருப்பதாகவும் கிரிக்கெட் வாரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.