டில்லி

சீன ஆக்கிரமிப்பு குறித்த அறிக்கையை நீக்கியதற்காகப் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் லடாக் எல்லைப்பகுதியில் சீனப்படைகள் இந்திய ராணுவத்தினரைத் தாக்கி 20 பேர் உயிரிழந்த போதில் இருந்தே சீன ஆக்கிரமிப்பு குறித்து புகார் எழுந்து வருகிறது.   எதிர்க்கட்சிகள் சீனப்படைகள் இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்து இந்த தாக்குதல் நடத்தியதாகத் தொடர்ந்து கூறி வந்தன.

ஆனால் அதை மத்திய அரசு மறுத்து வந்தது.  கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இருந்தே லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் சீனா ஆக்கிரமிப்பு செய்ததைச் செயற்கைக் கோள் புகைப்படங்கள் மூலம் எதிர்க்கட்சிகள் உறுதி செய்தும் மத்திய அரசு அதை ஒப்புக் கொள்ளவில்லை.

இந்நிலையில் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கல்வான் பள்ளத்தாக்கு நடப்பதற்குப் பல நாட்கள் முன்னரே சீனப்படைகள் அந்தப் பகுதிகளில் ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறப்பட்டிருந்தது.  இது சர்ச்சையை ஏற்படுத்தியதால் மத்திய அரசு அந்த அறிக்கையை ஊடகங்களில் இருந்து நீக்கி உள்ளது.

அறிக்கை நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், இந்திய பிரதமர் மோடி சீனாவுக்கு அஞ்சி இந்த அறிக்கையை நீக்கி உள்ளதாகக் குற்றம் சாட்டி உள்ளார்.  மேலும் இவ்வாறு ஆவணங்களை நீக்குவதால் சீனா ஆக்கிரமிப்பு நடத்தவில்லை என ஆகி விடாது எனவும் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “சீனாவுக்கு எதிராக நிற்பதை விடுங்கள், இந்தியப் பிரதமருக்கு அந்த பெயரைச் சொல்லக் கூட தைரியம் இல்லை.  நமது பகுதியில் சீன ஆக்கிரமிப்பு உள்ளதை மறுப்பதாலோ, இணையத்தில் இருந்து ஆவணங்களை நீக்குவதாலோ உண்மையை மாற்ற முடியாது” எனப் பதிந்துள்ளார்.