டில்லி

சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் அஞ்சலி செலுத்தி உள்ளார்.

கர்நாடக மாநிலம் துமக்கூரு வில் அமைந்துள்ள லிங்காயத்துகள் மடம் சித்தகங்கா மடம் ஆகும்.   சித்தலிங்கா மடத்தின் மடாதிபதி சிவகுமார சாமி பல ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி, உடை, உணவு மற்றும் இருப்பிடம் அமைத்துக் கொடுத்துள்ளார்.  கர்நாடக மக்கள் இவர் மீது மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டு இருந்தனர்.

சுமார் 110 வயதாகும் சிவகுமார சாமி கடந்த 15 நாட்களாக உடல்நலம் குன்றி இருந்தார்.  அவருக்கு மடத்தில் உள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.  சிகிச்சை பலனின்றி இன்று காலை 11.44 மணிக்கு சிவகுமாரசாமி மரணம் அடைந்தார்.   அதை ஒட்டி கர்நாடக மாநிலம் மூன்று நாட்கள் அரசு துக்கம் அனுஷ்டிக்கப்படும் என அறிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “சித்தகங்கா மடத்தின் மடாதிபதி சிவகுமார சாமி மறைவால் நான் வருத்தம் அடைந்துள்ளேன்.   சாதி மற்றும் மத வேறுபாடின்று கோடிக்கணக்கான இந்தியர்களால் மதிக்கப்பட்டவர் சாமிஜி.    அவருடைய மறைவு ஆன்மீகத்தில் பெரும் பின்னடவை ஏற்படுத்தி உள்ளது.  நான் அவருடைய பக்தர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிந்துள்ளார்.