டெல்லி: நீங்கள் கைவிட வேண்டியது வெறுப்புணர்வை, சமூக வலைதள கணக்குகளை அல்ல என்று பிரதமர் மோடிக்கு பதிலடி தந்திருக்கிறார் ராகுல் காந்தி.

தேசிய அளவில் சமூக வலைதளங்களை அதிகளவு பயன்படுத்தியவர் பிரதமர் மோடி. சமூக வலைதளங்களை பயன்படுத்தி தான் நாடு முழுக்க ஆதரவை திரட்டினார் என்றும் பலர் கூறுவது உண்டு.

உலகளவில் சமூகவலைதளங்களில் அதிக எண்ணிக்கையிலான பின்தொடர்பவர்களை கொண்டவர் பிரதமர் மோடி. ஆனால், அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் வெளியேற எண்ணியுள்ளேன் என்று அவர் அதிரடியாக அறிவித்து இருக்கிறார்.

இந்த அறிவிப்பையும் அவர் டுவிட்டரில் தான் வெளியிட்டு உள்ளார். இந் நிலையில் அவரது இந்த முடிவை அறிந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பதில் தந்திருக்கிறார். அவர் தமது பதிலை டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

பிரதமர் மோடியின் டுவிட்டர் பதிவை மேற்கோள் காட்டிய அவர், நீங்கள் கைவிட வேண்டியது வெறுப்புணர்வை, சமூக வலைதள கணக்குகளை அல்ல என்று பதிலடி தந்திருக்கிறார். அவரது இந்த பதில் பதிவும் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.