டெல்லி:  அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக பொது மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.

நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகின்றது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரித்து உள்ளது. அத்யாவசிய பொருட்களின் தொடர் விலை உயர்வானது, அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதித்துள்ளது.

இந் நிலையில், விலைவாசி உயர்வுக்கு எதிராக பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக ஆன்லைன் பிரசாரத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

இது குறித்து காங்கிரஸ் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது: பாஜக என்பது பாரம் ஏற்றும் ஜனதா கட்சி. நாட்டின் நலனை கருதி அவர்களுக்கு எதிராக நாம் விரைவில் பேசுவோம். வாருங்கள்… விலை உயர்வுக்கு எதிரான பிரசாரத்தில் இணையுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல், ராகுல் தனது டிவிட்டர் பதிவில், குறிப்பிட்டு உள்ளதாவது: விலை உயர்வு என்பது சாபமாகும். மத்திய அரசு மக்களை விலையேற்றத்தில் மூழ்கடித்து வரி வருமானத்தை ஈட்டுகிறது. நாட்டின் அழிவுக்கு எதிராக குரல் கொடுங்கள் என்று வலியுறுத்தி இருக்கிறார்.