டில்லி:

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில்,  திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை அறிமுகப்படுத்தி, நாளை தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொடங்குகிறார்.

இதற்காக கன்னியாகுமரியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர்கள் உள்பட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விசிக, மதிமுக, ஐஜேகே உள்பட கூட்டணி கட்சியினர் பங்கேற்க உள்ளனர்.

மோடி ஆட்சிக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஒன்றுபட்டு தேர்தலை சந்திக்கின்றன. தமிழகத்தில், திமுக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் 9பெரியகட்சிகள், 14 சிறிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி உருவாகி உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. அதுகுறித்து இன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை வருகிறார். நாலை  காலை சென்னை வரும் ராகுல்காந்தி, ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூரியில் மாணவிகளுடன் உரையாடுகிறார்.

பின்னர் நண்பகல் 1.30 மணி அளவில் செய்தியாளர்களை சந்திப்பு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து தனி விமானத்தில் திருவனந்தபுரம் செல்லும் ராகுல், அங்கிருந்து கன்னியாகுமரிக்கு காரில்  செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாலை மாலை கன்னியாகுமரியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ராகுலின் முதல் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பாக்கப்படுகிறது