கோழிக்கோடு: தனது சொந்த தொகுதியான வயநாட்டைச் சேர்ந்த சுமார் 1000 சிறுநீரகம் / கல்லீரல் நோயாளிகளின் மருத்துவச் செலவுக்குப் பொறுப்பேற்றுள்ளார் ராகுல் காந்தி.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், உத்திரப் பிரதேசத்திலுள்ள அமேதி மற்றும் கேரளாவின் வடகிழக்கு எல்லையில் அமைந்த வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார் ராகுல் காந்தி.

அதில், அமேதியில் தோல்வியடைந்த அவர், வயநாட்டில் அமோக வெற்றிபெற்றார். அவர், வயநாட்டில் போட்டியிட்டதால், ஒட்டுமொத்த கேரள மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில், இன்று மாலையில், வயநாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களோடு ராகுல் காந்தி உரையாடினார். அப்போது, அத்தொகுதியைச் சேர்ந்த சிறுநீரகம் / கல்லீரல் நோயாளிகள் படும் அவஸ்வதைகள் குறித்த தகவல்கள் வெளிவரவே, அத்தகைய உடல்நலப் பிரச்சினைகள் கொண்ட சுமார் 1000 நோயாளிகளின் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார் ராகுல் காந்தி.

அமேதி தொகுதியில், வெற்றி வாய்ப்பை இழந்த நிலையிலும், அத்தொகுதி மக்களுக்காக ராகுல் காந்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.