கான்பெரா: தனது முதல் சர்வதேசப் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியாவின் கேமரான் கிரீனிற்கு வாழ்த்து தெரிவித்த இந்தியாவின் கேஎல் ராகுலின் செயல் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி, தனது முதல் சர்வதேசப் போட்டியில் ஆடுவதற்கு வாய்ப்பு பெற்றார் இளம் கேமரான் கிரீன்.

அதேசமயம், அவர் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, சற்று பதற்றத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கவனித்திருக்கிறார் பின்னால் கீப்பிங் செய்து கொண்டிருந்த இந்தியாவின் கேஎல் ராகுல்.

இதுகுறித்து பேசிய கிரீன், “ஏதாவது பதற்றம் உள்ளதா, இல்லையா? என்றார். ஆம்… கொஞ்சம் டென்ஷனாக உள்ளது என்றேன். அதற்கு, சிறப்பாக செயல்படுங்கள் இளம் வீரரே! என்று வாழ்த்தினார்”. அவரின் இந்த செயலை எப்போதும் மறக்கமாட்டேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் கிரீன்.

இந்தப் போட்டியில், 27 பந்துகளில் 21 ரன்களை அடித்த கிரீன், குல்தீப் பந்துவீச்சில் கேட்ச் முறையில் அவுட்டானார். தனது இன்னிங்ஸில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸரும் அடித்தார்.