காந்திநகர்:

புல்லட் ரெயில் திட்டத்தை எதிர்ப்பவர்கள் மாட்டு வண்டியில் செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக குஜராத்தில் ஒட்டக சவாரி மேற்கொண்டு ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார்.

குஜராத்தில் பல பகுதிகள் பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. இதனால் இங்கு ஓட்டக போக்குவரத்து தான் சரியானது என்று எடுத்துக் கூறும் வகையில் இந்த பிரச்சாரத்தில் ராகுல்காந்தி ஈடுபட்டார்.

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலுக்காக ராகுல்காந்தி கடந்த 2 தினங்களாக டில்லியில் முகாமிட்டிருந்தார்.

தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு இன்று ஓட்டக சவாரி மேற்கொண்டு மீண்டும் தனது பிரச்சாரத்தை குஜராத்தில் தொடங்கினார். புஜ் பகுதியில் இருந்து அஞ்சாருக்கு அலங்கரிக்கப்பட்ட ஒட்டக சாரட்டில் பாரம்பரியமான குட்ச் ஸ்டைலில் அவர் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார்.

முன்னதாக ராகுல்காந்தி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மாட்டு வண்டியில் பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார். இதை தொடர்ந்து தற்போது ஒட்டக சாரட்டில் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.