சென்னை,
டல்நலமில்லாமல் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்க ராகுல் காந்தி தமிழகம் வருகிறார்.
இன்று காலை 11.00 மணி அளவில் தனி விமானம் மூலம் சென்னை வருவதாக தகவல்கள் வந்துள்ளது.
உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு சென்னை மைலாப்பூரில் உள்ள காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழக அரசியல் கட்சியினர் அவரை சந்திக்க மருத்துவமனை சென்று அவரது உறவினர்களிடமும், மருத்து வர்களிடமும் நலம் விசாரித்து வருகின்றனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், எச்.வசந்தகுமார் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் கருணாநிதியை சந்தித்து விரைவில் நலம்பெற வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் இன்று காலை 11 மணி அளவில் சென்னை வருவகிறார். அவரது விமானம் முற்பகல் 11.15 மணி அளவில் சென்னை பழைய விமான நிலையத்தில் தரை இறங்கும் என தெரிகிறது.
நேற்று இரவு கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராகுல்காந்தி, அங்கிருந்து நேராக சென்னை வருகிறார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங்கும் வருகிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் விமான நிலையத்தில் அவர்களை வரவேற்று, முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை சென்று கருணாநிதியை நலம் விசாரிப்பார் என்றும், அதன்பிறகு  திமுக பொருளாளரும், கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலினை சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.