புதுடெல்லி: யெஸ் வங்கியின் நிறுவனரும், முன்னாள் தலைமை நிர்வாகியுமான ராணா கபூர் வீட்டில், அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது யெஸ் வங்கி, கடும் நிதி நெருக்கடியில் சிக்கி, திவாலாகும் நிலையில் இருப்பதையடுத்து, அதன் நிர்வாகம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டது. அதன் 49% பங்குகளை எஸ்பிஐ வங்கி வாங்கவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், யெஸ் வங்கியின் தலைமை நிர்வாகியாக ராணா கபூர் இருந்தபோது, கடன் வழங்கலில் முறைகேடுகள் நடந்ததாக, அவருக்குப் பின்னர் பதவிக்கு வந்த ரவ்நீத் கில் அம்பலப்படுத்தினார்.

இதனையடுத்து, ராணா கபூர் பதவி விலகுமாறு, ரிசர்வ் வங்கியிடமிருந்து எச்சரிக்கையும் வந்தது. தற்போதைய நிலையில், ராணா கபூர் மீது பண மோசடி உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரின் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.