நியூஸ்பாண்ட்:

மிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் ல்  வருமான வரித்துறை சோதனை நடந்துகொண்டிருக்கிறது.

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி. தினகரன் சார்பில், வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் பணம், தங்க நகை பொருட்கள் எல்லாம் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டுகிறது என்றும்  அதனாலேயே இந்த ரெய்டு என்றும் ஒரு பேச்சு உலவுகிறது.

அதே நேரம், ” மணல் குவாரி சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டதில் இருந்தே விஜயபாஸ்கரின் வியாபார  தொடர்புகள், பணப் பறிமாற்றங்களை வருமானவரித்துறை ஆராய ஆரம்பித்துவிட்டது. இவர் மட்டுமின்றி, தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி உள்ளிட்ட மேலும் சிலரது பண நடவடிக்கைகளையும் கண்காணித்து வந்தது வருமானவரித்துறை.

விஜயபாஸ்கர்

விசயம் அறிந்தோர் கூறுவதாவது:

தேர்தல் என்றாலே.. அதுவும் இடைத்தேர்தல் என்றாலே பணப்புழக்கம் என்பது சகஜமான விசயமாகிவிட்டது. அதிலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வென்றே ஆகவேண்டும் என்கிற எண்ணத்தில் டிடிவி தினகரன் தரப்பு பணத்தை வாரி இறைக்க ஆரம்பித்தது.

அதுவும் நேற்று முன்தினம் விடியற்காலையில் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு  புத்தம் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் சரமாரியாக வழங்கப்பட்டது பிற அரசியல் கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

இந்த நோட்டு விநியோக பின்னணியில் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சில  அமைச்சர்கள் இருப்பதாக  தகவல் வெளியானது.

இந்த நிலையில் நேற்று அ.தி.மு.க அம்மா அணி வேட்பாளர் தினகரனை ஆதரிப்பதாக அறிக்கை வெளியிட்டார் நடிகரும் சமக கட்சி தலைவருமான சரத்குமார்.

இன்று காலை  அவரது வீட்டிலும் ரெய்டு துவங்கி நடந்து வருகிறது. மேலும், தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, அ.தி.மு.க எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்ட வேறு சிலரின் வீடு, அலுவலகங்களிலும் ரெய்டு நடக்கிறது.

இது குறித்து வருமானவரி துறையினர் தரப்பில்,”ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடந்த பண விநியோகத்தை அடுத்து ரெய்டு நடத்தப்படவில்லை. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஆளும்கட்சி  பிரமுகர்கள் சிலரது தொலைபேசி உரையாடல்களை கண்காணித்து வந்தோம். இதையடுத்து  ஊழல் பணத்தை அவர்கள் எங்கே பதுக்கியிருக்கிறார்கள், எந்தெந்த தொழில்களில் இறங்கியிருக்கிறார்கள், “மேலிடத்துக்கு” எவ்வளவு கமிசன் கொடுக்கிறார்கள் என்பதையெல்லாம் அறிந்தோம்.

மேலும் இவர்களுக்கு நெருக்கமான சிலரே, எங்களுக்கு சில தகவல்களை அளித்தார்கள்.

இதன் அடிப்படையிலேயே இன்று காலை முதல் சோதனையை துவக்கினோம்” என்கிறார்கள்.

மேலும், “தவிர ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததில் இருந்தே சில புள்ளிகளை கண்காணித்து வந்தோம்.

இதையடுத்து ஏற்கெனவே தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரி நடத்துவதற்கு உரிமம் வாங்கி வைத்திருக்கும் சேகர் ரெட்டி. அவருக்கு சொந்தமான ஆறு வீடுகள், இரண்டு அலுவலகங்களில் ரெய்டு நடந்தது. மேலும்   சீனிவாசலு மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் பிரேம்குமார் உள்ளிட்டவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் பண மலையையே பார்த்து அதிர்ந்தோம்.  96 கோடியே 89 லட்சம் ரூபாய்க்கு பழைய ரூபாய் நோட்டுகளும் 9 கோடியே 63 லட்சத்துக்கு புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதுமட்டுமல்ல..  கணக்கில் காட்டப்படாமல் வாங்கிக் குவிக்கப்பட்ட தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இன்னொரு முக்கிய விசயம்..  இந்த சோதனையின் போது  தமிழக அமைச்சர்கள் ஐவரின் ரகசிய கணக்கு வழக்குகள் கிடைத்தன. இந்த கணக்கு வழக்குகளை பராமரிப்பதே சேகர் ரெட்டியின் நிறுவனம்தான் என்பதும் தெரியவந்தது. அதாவது அமைச்சர்கள்  ஊழல் பணத்தை சேகர் ரெட்டி மூலம் தொழில் முதலீடுகளாக மாற்றியிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது.

500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த நேரத்தில் இவர்கள் சென்னை பாரி முனையில் உள்ள ஒரு பெரிய நகைக்கடையில் தங்கக் கட்டிகளாக வாங்கிக் குவித்தனர்.  இதை வாங்கித்தரும் புரோக்கராக செயல்பட்டவர் பிரேம்குமார் என்பவர்.

இந்த பிரேம்குமாரும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் கல்லூரி நண்பர்கள். இதையடுத்து  பிரேம்குமாருக்குச் சொந்தமான சென்னை  கீழ்பாக்கம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆவணங்கள் கிடைத்தன.

அதே போல நகைக்கடைகளில் ரெய்டு செய்தபோது மிகச்சில விநாடிகளில் 100 கிலோ தங்கம் வரையில் விற்பனை ஆகியிருந்தது தெரியவந்தது.

அது குறிதது விசாரிக்கும்போதுதான், பிரேம்குமார் சிக்கினார். அவரைத் தொடர்ந்து முன்னாள் பெண் அமைச்சர்கள், மன்னார்குடி உறவுகள் என்று மேலும் சிலரது தில்லுமுல்லுகளும் தெரியவந்தன. அந்த நேரத்தில்தான் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் மகன் உட்பட சிலர் ருமான வரித்துறை விசாரணைக்கு ஆளானார்கள்.

இந்த நிலையில் அமலாக்கத்துறையும் சேகர் ரெட்டியை விசாரித்தது” என்கிறார்கள் வருமானவரித்துறை உயர் அதிகாரிகள்.

தற்போது சிலர் மீது சோதனை நடவடிக்கை பாய முக்கிய காரணம் ஒன்றையும் சொன்னார்கள்.

“தமிழக முதல்வராக  எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற தங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் வராது என்று நினைத்த அமைச்சர்கள் வெளிப்படையாகவே தங்கள் “பணப்பரிவர்த்தனைகளை” நிகழ்த்த ஆரம்பித்தார்கள்.

இவர்களில் முக்கியமானவர் விஜயபாஸ்கர். இவரும் முன்னாள் அமைச்சர் ஒருவரும் இணைந்து பலவித தொழில்களை செய்துவருகிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த முன்னாள் அமைச்சர் ஓ.பி.எஸ். அணியில் இருக்கிறார்! மேடையில் கடுமையாக ஒருவரை ஒருவர் விமர்சிப்பார்கள்.. மறைமுகமாக பிஸினஸ் பார்ட்னர்கள்” என்று அதிரவைக்கிறார்கள் அதிகாரிகள்.