சென்னை:

சென்னையில் பல்வேறு புதிய ரயில்வே திட்டங்களை  ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கோட்டை ரயில் நிலையங்களில் வைஃபை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், சென்னை மூர் மார்க்கெட்டிலிருந்து பேசின் பிரிட்ஜ் வரை 5 மற்றும் 6வது பாதைகள், தாம்பரம் ரயில் நிலையத்தில் 2வது வாயில் உள்ளிட்டவற்றை அவர் தொடங்கி வைத்தார்.

சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில், இரு பக்க நடைமேடை உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் அவர் தொடங்கி வைத்தார். இதேபோல் செங்கோட்டை – ஆரியங்காவு இடையே உருவாக்கப்பட்டுள்ள புதிய அகலப் பாதையையும் காணொலி காட்சி முறையில் மத்திய அமைச்சர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இது தவிர, சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்கும் திட்டத்தையும் அவர் தொடங்கிவைத்தார். கோயமுத்தூர் – பெங்களூரு இடையே விரைவில் புதிய ரயில் இயக்கப்படும் எனவும் ரயில்வே துறை நவீன மயமாக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் சுரேஷ் பிரபு , ரயில்வே கட்டமைப்புகள் நவீனமயமாக்கப்பட்டு வருவதாகவும்,  பழைய பெட்டிகளுக்குப் பதிலாக அதிநவீன பெட்டிகள் ரயில்களில் இடம் பெறும் என்றும் கூறினார்.