சென்னை: சென்னையில் நேற்று இரவுமுதல் பெய்து வந்த கனமழை காரணமாக, பல பகுதிகளில் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து  பொதுமக்கள் உடனே தொடர்புகொள்ள அவசர  உதவிஎண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
உதவி தேவைர்படுவோர் உடனே 044 2538 4530, 044 2538 4540. ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் உதவிகள் குறித்து தெரிவிக்கலாம். அதேபோல் 24/7 இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு மையத்தினையும் (தொலைபேசி எண்: 1913) பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,  சென்னையில் தண்ணீர் தேங்கினால் மரங்கள் விழுந்தால் அகற்றுவதற்கு மர அறுவை இயந்திரங்கள், மோட்டார் பம்புகள், படகுகள், நிவாரண மையங்கள், நடமாடும் மருத்துவக் குழுக்கள், பொது சமையல் அறை, அம்மா உணவகங்கள் தயாராக இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. பெரும்பாலான சாலைகள் தண்ணிரில் மிதக்கின்றன. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வட மாவட்டங்களான, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மழை காரணமாக பாதிப்புக்குள்ளான மக்கள் புகார்கள் தெரிவிக்க அவசர எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
மேலும், மழை காரணமாக பொதுமக்கள் வெளியில் தேவையின்றி நடந்து செல்வதை தவிர்க்கலாம். அறுந்துகிடக்கும் மின்சார கம்பிகள் இருப்பின் மாநகராட்சிக்கு தெரிவிக்கலாம்.  சாய்ந்து கிடக்கும் மரங்கள் குறித்தும் உடனடியாக மாநகராட்சிக்கு தெரிவிக்கலாம்.
வெள்ளம் , இடி மின்னல் சமயத்தில் என்ன செய்ய வேண்டும்? என்பது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளது.