சென்னை:
மிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வடதமிழகம் உள்பட 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு காற்றின் திசை மாற்றம் காரணமாக வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய, மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.