சென்னை:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்திலும் கடற்கரையோர பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பல நாட்களுக்கு பிறகு சென்னையில் நேற்று ஓரளவு மழை பெய்தது, மக்களை குளிர்வித்தது. இந்த நிலையில், தற்போது உருவாகி உள்ள  குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்தர்,  ‘ வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.

இதன் காரணமாகவும், வெப்பச் சலனத்தின் காரணமாகவும் அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தார்.

மேலும், வேலூர், காஞ்சிபுரம் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.  சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று மாலை அல்லது இரவு மழை பெய்யும்’ எனத் தெரிவித்தார் கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை,தாமரைப்பாக்கத்தில் 10 செமீ மழையும், போளூரில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.