சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகாலை முதல் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன் படி, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது.

சென்னையில், பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி, பல்லாவரம், நங்கநல்லூர், அரும்பாக்கம், கோயம்பேட்டு, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர் போன்ற பகுதிகளிலும், சூளைமேடு, எம்.எம்.டி.ஏ பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரிக்கை, செவிலிமேடு, பூக்கடை சத்திரம், வாலாஜாபாத் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.