கொழும்பு: பெரும்பான்மையோனோர் சிறுபான்மை சமூகத்தின் மீது கொண்ட வெறுப்பு மற்றும் இன தேசிய உணர்வின் மூலம் ராஜபக்சே சகோதரர்கள் வெற்றி பெற்று ஆட்சியதிகாரத்தைக் கைபற்றியிருந்தாலும், அதுவே அந்நாட்டின் பொருளாதாரத்தை அழித்தொழிக்கும் ஒன்றாக இருக்கும் என நம்பப் படுகிறது.

நவம்பர் 18 ஆம் தேதியன்று இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபய ராஜபக்சேயும், நவம்பர் 21 ஆம் தேதியன்று புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌சேயும் பதவியேற்ற விதமே நாட்டில் சிங்கள இனவாத ராஜ்யத்தை உறுதியாக ஸ்தாபிக்கப் போகும் அடையாளத்தைக் காட்டியது.

கோத்தபய ராஜபக்சேவின் பதவியேற்பு வழக்கத்திற்கு மாறாக அநுராதபுரத்தில் கடைசி தமிழ் மன்னன் எல்லாளனை வென்ற துட்டகெமுனு கட்டிய தொன்மை வாய்ந்த புத்த ஆலயத்தில் நடைபெற்ற போதே சிங்கள ராஜ்யத்தை முழுமையாக அமைப்பதற்கான அறிகுறியாக அது தெரிந்தது.

அவர் ட்விட்டரில், தமக்கு வாக்கு அளித்தவர் அளிக்காதவர் எல்லோருக்கும் தற்போது தாமே ஜனாதிபதியென அறிவித்தாலும், இதனை சிங்கள பெரும்பான்மையினரின் கருணையின் பாதுகாப்பில் சிறுபான்மையினர் விருந்தாளிகளாக வாழ்ந்து கொள்ளலாம் என்பதாகவே அது வெளிப்பட்டது.

அரசியல் அவதானிகளின் பார்வையில், இவர்கள் அச்சமூட்டும் ஒரு அரசியல் அதிகாரத்தின் பிரதான பாதைக்கு வந்திருப்பதாக வெளிப்படுத்தியுள்ளனர். அதைப் போன்றே தற்போதைய அண்மைச் செய்திகளில், பெரும்பான்மையினரைப் பகைத்துக் கொண்டு சிறுபான்மையினருக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க முடியாது என்ற செய்தி பீதியூட்டுவதாகவே உள்ளது.