ஆல்வார், ராஜஸ்தான்
இந்துக்கள் யாரும் தங்கள் இல்லத்துக்குள் இஸ்லாமியர் நுழையக்கூட அனுமதிக்கக் கூடாது என ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் உள்ளது ஆல்வார் தொகுதி. இந்த தொகுதியில் மியோ இஸ்லாமியர்கள் அதிகம் உள்ளனர். இந்த தொகுதியில் சட்டசபை உறுப்பினர் பன்வாரிலால் சிங்கால் என்பவர். இவர் பாஜகவை சேர்ந்தவர். பன்வாரிலல் பல முறை இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு எதிராக கருத்துக்களைக் கூறி சர்ச்சையில் மாட்டிக் கொண்டுள்ளார். தீவிர இஸ்லாமிய எதிர்ப்புக் கொன்கையை கொண்டவர் இவர் என்பது குறிப்பிடத் தக்கது.
சமீபத்தில் தனது தொகுதியில் உள்ள இஸ்லாமியர்களைப் பற்றி அவர் தெரிவித்த கருத்துக்கள் அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. பன்வாரிலால் சிங்கால், ”என் தொகுதியில் உள்ள மியோ இஸ்லாமியர்கள் என்றுமே பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். நானும் அவர்களிடம் வாக்களிக்குமாறு கேட்கவும் மாட்டேன். அவர்கள் எனக்கு வாக்களித்தால் அதன் பிறகு அவர்கள் செய்யும் சட்டவிரோதமான குற்றங்களில் இருந்து அவர்களை நான் காப்பாற்றி ஆக வேண்டும்.
எனக்கு அது பிடிக்காது. அதனால் தான் நான் அவர்களை நெருங்கக் கூட விடுவதில்லை. மேலும் நானும் அவர்கள் வீடுகளுக்கு செல்வதும் இல்லை. இந்துக்கள் யாருமே இஸ்லாமியர்களை வீட்டுக்குள் நுழையக்கூட அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் அவர்கள் லவ் ஜிகாத் செய்ய வெளிநாட்டிடம் இருந்து பணம் வாங்கி உள்ளார்கள். அவர்களை அனுமதித்தால் உங்கள் வீட்டுப் பெண்களை காதல் ஆசை காட்டி மதமாற்றம் செய்து விடுவார்கள்.
முகநூலில் மியோ இஸ்லாமியர்கள் பலர் ஃபேக் ஐடி மூலம் படித்த இந்துப் பெண்களிடம் பொய்த்தகவல் அளித்து காதல் வலை வீசி மத மாற்றம் செய்கின்றனர். அதனால் படித்த அறிவுள்ள இந்துப் பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறி விடுகின்றனர். அதே நேரத்தில் இஸ்லாமியப் பெண்களுக்கு கல்வி அறிவு அளிக்காமல் வைத்துள்ளனர். அதற்குக் காரணம் அந்த பெண்கள் கல்வி அறிவு பெற்றால் இந்துக்களை மணம் புரிந்துக் கொள்வார்கள் என்னும் பயத்தினால் தான்” எனக் கூறி உள்ளார்.