டில்லி:

அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து உரிய அனுமதி பெறாமல் செய்தி வெளியிடக் கூடாது என்று மீடியாக்களுக்கு எதிரான புதிய அவசர சட்டத்தை ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே பிறப்பித்துள்ளார். இவர்களுக்கு எதிராக மாஜிஸ்திரேட்களும் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று அந்த சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் ஆளும் பாஜக அரசின் இந்த புதிய உத்தரவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது. க £ங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், ‘‘இது 21வது நூற்றாண்டு என்பதை ராஜஸ்தான் முதல்வருக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது 2017. 1817 அல்ல’’ என்று தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு வல்லுனர் சாந்தி பூஷன் கூறுகையில், ‘‘இது முறையற்ற செயல். முற்றிலும் நீக்கப்பட வேண்டும். இதன் மூலம் அரசியல்வாதிகள் ஊழல் செய்யலாம். ஆனால் அவர்களை விசாரணை செய்யக் கூடாது என்ற அர்த்தம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

முன்னாள் மத்திய அரசு வக்கீல் சோலி சேராப்ஜி கூறுகையில், ‘‘அரசியலமைப்பு சட்டப்படி இந்த அவசர சட்டம் மிகவும் சந்தேகத்திற்கு இடமான வகையில் உள்ளது’’ என்றார். ஓய்வுபெற்ற சட்ட ஆணை தலைவர் ஏ.பி. ஷா கூறுகையில், ‘‘நீதிபதிகளுக்காக சட்டமன்றம் எப்படி சட்டம் இயற்றலாம். இதற்கு நடவடிக்கை எ டுக்கும் நடைமுறைகளை உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளது.

அவசர சட்டத்தை நான் பார்க்கவில்லை. உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீதான குற்ற ச்சாட்டுகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி பெறாமல் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளது. மாஜிஸ்திரேட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாலும் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி பெற வேண்டும். நீதிபதி பதவி என்பது முற்றிலும் மாறுபட்டது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ இந்த விவகாரத்தில் மீடியாக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக முந்தைய உச்சநீதிமன்ற உத்தரவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது பேச்சு சுதந்திரம் மற்றும் வெளிப்பாடுக்கு ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடாகும்’’ என்றார்.

மூத்த வக்கில் துஸ்யந் தவே கூறுகையில், ‘‘இது மீடியாக்களுக்கு மட்டும் ஏற்படுத்தப்பட்ட தடை கிடையாது. ஊழலுக்கு எதிராக குடிமகன் போராடுவதை தடுக்கும் செயலாகும்’’ என்றார்.