சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதியில் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதை தொடர்ந்து வரும் டிசம்பர் 31ந்தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிவு அறிவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவது சம்பந்தமாக ஆலோசிக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நாளை டில்லி பயணம் மேற்கொள்கிறார்.

டில்லியில் உள்ள தலைமை தேர்தல்ஆணையத்தில், அவர் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதியுடன் ஆர்.கே.நகர் தேர்தல் தேதி குறித்து ஆலோசிக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆலோசனைக்குப் பின், ஆர்.கே.நகர் தேர்தல்  தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைய விதிப்படி அறிவிப்பு வெளியிட்ட 26 நாட்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக தேர்தலை நடத்தி முடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த இடைத்தேர்தலின்போது,  யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், வி.வி.பேட் இயந்திரங்கள் பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.