கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய இன்று (ஆகஸ்ட்20) மாலை 6 மணிக்கு கூட்டு பிரார்த்தனை செய்ய இயக்குனர் பாரதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கூட்டு பிரார்த்தனையில், இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இருக்கும் அவருடைய ரசிகர்கள் எஸ்.பி.பி விரைவாக குணமடைய வேண்டி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி பாடலை ஒலிக்க செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

“முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவர் குணமடைந்து வர வேண்டும் என்று பொதுமக்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்தார்கள். அவர் குணமடைந்து திரும்பி வந்தார். அதே போல, இப்போது எஸ்.பி.பி குணமடைந்து மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம். எஸ்.பி.பி அன்பின் விதைகளை மட்டுமே விதைத்துச் சென்றுள்ளார். அவர் ஒரு அற்புதமான கலைஞன். விரைவில் அவர் நம்மிடையே திரும்ப வேண்டும். அவரை நாம் மீண்டும் திரும்ப பெறுவோம்” என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்தினருக்கு விடுத்துள்ள அறிவிப்பில் பாடும்நிலா எழுந்துவா, இன்றுமாலை 6மணிமுதல் 6.05 மணிவரை கூட்டுப்பிரார்த்தனை செய்து எஸ்.பி.பியை மீட்டெடுப்போம் என்று கூறியுள்ளார்.