தமிழகத்தில் பாஜகவால் காவி சாயம் பூச முடியாது என்பதை ரஜினிகாந்த் தெளிவுப்படுத்தி உள்ளதாக சிவகங்கை மக்களவை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திருவள்ளுவரை போல, தனக்கும் காவி சாயம் பூச முயற்சி நடைபெறுவதாகவும், அவர்களின் காவி சாயத்திற்கு திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், தானும் மாட்டப்போவது இல்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்திருந்தார். இக்கருத்துக்கு பாஜக தரப்பில் இருந்து பல்வேறு எதிர் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிவகங்கை மக்களவை தொகுதி எம்.பியும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம், “சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் வைத்து செய்தியாளர்களிடம், காவி சாயத்தில் நான் மாட்ட மாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் காவி சாயத்தை தமிழகத்தில் ஒரு நாளும் பூச முடியாது என்பதை தான் நடிகர் ரஜினிகாந்த் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் எனது தந்தைக்கு மிக விரைவில் ஜாமீன் கிடைக்கும் என்று நம்புகிறேன். விரைவில் அவர் வெளிவருவார்” என்று தெரிவித்துள்ளார்.