சென்னை:

ஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் போராட்டம் நடத்தப்படும் என்று திக தலைவர் கொளத்தூர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆன்மிக அரசியல் தொடங்கப்போவதாக கூறி 2 ஆண்டுகளை கடந்தும், அது குறித்து கவலைப்படாமல், தனது ரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றி,  தனது 70வயதிலும் படத்தில் நடித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த வரும் நடிகர் ரஜினி, சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் பொன்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது, துக்ளக் கையில் வைத்திருப்வரே அறிவாளி என்று புதிய கண்டுபிடிப்பை கூறியதுடன், பெரியார் தலைமையில் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின்  ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றும் செருப்பு மாலை போடப்பட்டது என்றும் பேசினார்.

ரஜினியின் இந்த பேச்சு தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பலர் ரஜினியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் போராட்டம் நடத்தப்படும் திக எச்சரிக்கை விடுத்துள்ளது.

மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு குறித்து பொய்யான தகவலை பரப்பிய ரஜினிகாந்த் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த பேரணியில் இராமன் சீதை ஆகியோர் உருவங்கள் நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய செய்தி வெளிவந்திருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலைப் பரப்பி அதன் வழியே தமிழ்நாட்டில் பெரியார் மீது மக்கள் கொண்டிருக்கிற நல்லெண்ணத்தை சிதைக்க வேண்டும் என்ற தீய உள்நோக்கோடும், தங்கள் எஜமானர்களை மகிழச் செய்ய வேண்டும் என பேசப்பட்டதாகவே நாங்கள் நம்புகிறோம். இந்த பொய்யான தகவலைப் பரப்பியதற்காக நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக பொதுவெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அதுமட்டுமில்லாமல் தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செயல்பட்டு வதந்தியைப் பரப்பி பொது அமைதியைக் குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது அனைத்து காவல் நிலையங்களிலும் கழகத் தோழர்களும் பெரியாரியல் பற்றாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் உடனடியாக புகார் கொடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சின்ன விஷயங்களுக்கெல்லாம் வழக்கு போடும் தமிழ்நாடு அரசு தங்களுடைய இயக்கத்தின் மூலவராக கருதப்படும் பெரியார் மீது செய்யப்பட்ட இழிவுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாம் சில நாட்கள் கவனித்துப் பார்த்து, அடுத்த கட்ட நடவடிக்கையாக அவரது திரைப்படம் திரையிடப்படும் அரங்குகளுக்கு முன்னால் மறியல் ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கைகளுக்கு அனைவரும் தயாராக இருப்போமாக”

இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

should ask apologizes otherwise protest,Warning