சென்னை,

பேருந்து கட்டணம் உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய சமத்துவக்கட்சி தலைவர் நடிகர் சரத்குமார், காவிரி பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காத ரஜினி, ரசிகர்களிடையே பாபா முத்திரை என்று ஆட்டுத்தலையை காட்டி வருகிறார் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த பேருந்து கட்டண உயர்வுக்கு அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ள நிலையில், சமத்துவ மக்கள் கட்சி சார்பில்,  பேருந்து கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில்  போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்ள வந்த நடிகர்  சரத்குமார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு போராட்ட மேடைக்கு வந்தார். அப்போது அவர் பேசியதாவது,

பேருந்து கட்டணம் உயர்வுக்கு மாநில அரசை கண்டித்த அவர, புதியதாக அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நடிகர்கள் குறித்தும் பேசினார். அப்போது,  காவிரி பிரச்சனையில் ரஜினியின் நிலைப்பாடு என்ன என்பதை அவர் விளக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மேலும், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று கூறிய ரஜினி, உடனே அமெரிக்காவுக்கு பறந்துவிட்டார் என்றும்,

ரஜினி காட்டும் முத்திரை பாபா முத்திரை அல்ல, ஆட்டுத் தலை என்றும் கடுமையாக சாடினார்.

மேலும், வாக்குக்கு பணம் கொடுக்க யார் வந்தாலும், அவர்களை செருப்பால் அடியுங்கள் என்றும் ஆவேசமாக கூறினார்.