சென்னை: நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து கட்சிகள் மும்முரமான அரசியல் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. ஆனால் தமது அரசியல் பிரவேசம் குறித்து, இறுதி முடிவை ரஜினிகாந்த் இன்னமும் அறிவிக்கவில்லை.

இந் நிலையில் நாளை தமது மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன் ஆலோசிக்க இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். அதற்காக, அனைத்து மாவட்ட செயலர்களுக்கும் தொலைபேசி வாயிலாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணிக்கு கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில், முக்கிய நிர்வாகிகள் மற்றும் மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் ரஜினிகாந்த்.

பின்னர், தமது அரசியல் நிலைப்பாடு குறித்த முடிவை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. இந் நிலையில், போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி மன்றம் சார்பில் கோடம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மனு ஒன்று அளிக்கப்பட்டு உள்ளது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 50 பேர் பங்கேற்க இருக்கின்றனர். அவர்களை முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளோம். அரசு வழிகாட்டுதலையும் பின்பற்றுகிறோம். எனவே, உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு கொள்கிறோம் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.