1aaabjpசென்னை:
காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தலையிட வேண்டும் என தமிழக பாரதியஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வற்புறுத்தி உள்ளார்.
காவிரி பிரச்சினையில் தமிழர்கள் தாக்கப்படுவதையும், தமிழர்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவதையும் கண்டித்து தமிழக பாரதியஜனதா கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழிசை சவுந்தரராஜன் கர்நாடகத்தை  கண்டித்து கோஷம் எழுப்பினார். அதையடுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவில் கலவரத்தை தூண்டுபவர்கள், அங்குள்ள சுயநல அரசியல்வாதிகள் தான் என்றார்.  மேலும் தமிழர்கள் தாக்கப்படுவதை  பாஜக வேடிக்கை பார்க்காது என தெரிவித்த அவர், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள கர்நாடக காங்கிரஸ் இவ்வாறான செயலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் இருமாநிலத்திற்கு பொதுவாக உள்ள ரஜினிகாந்த், காவிரி விவகாரத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் அனைவரும் பொறுமை காத்துவரும் நிலையில், கன்னட அமைப்புகள் கர்நாடகாவில் வெறியாட்டம் ஆடி வருவதாக குற்றஞ்சாட்டிய தமிழிசை, இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்றும் தமிழிசை வலியுறுத்தினார்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சித்தராமையாவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.