நான் கண் மூடுவதற்குள் தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று காலா இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது:

“இது ஒரு இசை வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை, படத்தின் வெற்றி விழா மாதிரி இருக்கிறது. நான் கடைசியாக கொண்டாடிய வெற்றி விழா சிவாஜி தான். சில வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த வெற்றி விழாவுக்கு வந்த கருணாநிதி அன்று பேசினார். அவரது அந்த குரலை மறக்க முடியாது. அவரது குரலை மறுபடியும் கேட்க வேண்டும். 75 ஆண்டுகளாக ஒலித்த அந்த குரல், மீண்டும் ஒலிக்க மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். விரைவில் அவரது குரல் ஒலிக்கும் என்று நம்புகிறேன்.

சிவாஜி படத்துக்கு பின்னர் ரோபோ படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதன் பின்னர் எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் படத்தின் வெற்றி விழாவை கொண்டாடவில்லை. பின்னர் ராணா படம் சரியாக போகவில்லை. பின்னர் லிங்கா படம் வெளியானது. அதுவும்சரியாக போகவில்லை.

அவ்வப்போது இமயமலைக்கு செல்வேன்.  அங்கே செல்வதே கங்கையை பார்க்கத்தான். தென்னிந்திய நதிகளை இணைப்பது தான் எனது கனவு. நான் கண் மூடுவதற்கு முன்னால் அது நடக்க வேண்டும்.

படத்திலும் சரி, வாழ்க்கையில் சரி நல்லவனாக இருக்க வேண்டும். ஆனால் ரொம்ப நல்லவனாக இருக்கக் கூடாது.

எனக்கு ஏற்பட்ட தோல்விகளைத் தொடர்ந்தது.   ரஜினி அவ்வுளோ தான். முடிஞ்சு போச்சுனு சொன்னாங்க. 40 வருசமாக சொல்றாங்க, அவர்களையும் தப்பு சால்ல முடியாது. வயிறு எரியத்தான் செய்யும்.

யார் என்ன சொன்னாலும் என் வழியில் நான் போய்க் கொண்டே இருப்பேன். அந்த நிலையில், காலத்திற்கு ஏற்ப மாற நினைத்தேன். அப்போது சவுந்தர்யா ரஞ்சித்தை அறிமுகம் செய்தார். அவர் டான் கதையை சொன்னார்.   மலேசியா அன்டர்வேர்டு டான் என்று அவர் கதை சொன்னதால் கதையை கேட்க ஆரம்பித்தேன். அவரிடம் பேசும்போதே, அவரது குணாதிசயமே பிடித்தது. பிறகு கதையை கேட்டேன். ரஞ்சித் சந்தர்ப்பவாதி இல்லை. அவர்மேல் அவருக்கு நம்பிக்கை இருந்தது.

அந்த படம் வெற்றி பெற்றது. பிறகு வொண்டர்பார் தயாரிப்பில்   நடிக்க ஆசைப்பட்டேன். அது தற்போது நடந்தது. தனுஷ் தங்கப் பையன். அப்பா அம்மாவை மதிக்கிறார். மனைவியை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறார்.

பிறகு வெற்றிமாறன் ஒரு கதை சொன்னார், கதை எனக்கு பிடித்தது, அது முழு அரசியல் படம். நான் அப்போது அரசியலுக்கு வரவில்லை. ஆகவே அந்த படத்தில் நடிக்கவில்லை.

பிறகு  மறுபடியும் ரஞ்சித்தை அழைத்தேன். இருவரும் இணைந்தோம். காலா படம் உருவானது. காலா அரசியல் படம் கிடையாது. ஆனால் அரசியல் இருக்கும்.

அரசியல் பற்றிய பேச நேரம் வரவில்லை. நேரம் வரும் போது அரசியல் பற்றி பேசுகிறேன்” என்று ரஜினி பேசினார்.