பெத்தராயுடு வெள்ளி விழா ஆண்டு…   ரஜினி கொடுத்த 45 லட்சம்..
ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் கடந்த இரு நாட்களாக , சமூக வலைத்தளங்களில் ரஜினிகாந்த் தான் -பேசுபொருள்.
காரணம்?
’’பெத்தராயுடு’’.
சரத்குமார் இரு வேடங்களில் நடிக்க கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ‘நாட்டாமை’ தமிழில் வசூல் சாதனை புரிந்த படம் என்பது நமக்குத் தெரியும்.
அதன் தெலுங்கு ரீ-மேக்’ படமான ‘பெத்தராயுடு’’ படம் ரிலீஸ் ஆகி நேற்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது.
ஆம். அந்த படம், 15-06-1995 அன்று வெளியானது.
மோகன்பாபு இரட்டை வேடத்தில் நடித்த இந்த படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்திருப்பார். சவுந்தர்யா, பானுப்ரியா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
‘’நாட்டாமை’’ போல் ‘பெத்தராயுடு’’வும் வசூல் சாதனை நிகழ்த்தியது.
அதன் வெள்ளிவிழா ஆண்டை, கொரோனா காரணமாகக் கொண்டாட முடியாத நிலையில் இருந்த ‘மோகன்பாபு,, தனது டிவிட்டர், மற்றும் வலைத்தளங்களில் ‘பெத்தராயுடு’’ உருவான விதம் குறித்துப் பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருக்கிறார்.
’பெத்தராயுடு’’ தொடக்கவிழாவுக்கு என்.டி.ராமராவ் வந்திருந்து மோகன்பாபு- ரஜினிகாந்த் பங்கேற்ற காட்சியை ‘கிளாப்’’ அடித்துத் தொடங்கி வைக்கும் வீடியோவை மோகன்பாபு வெளியிட்டுள்ளார்.
தோளில் துண்டு போட்டபடி படு ’’ஸ்டெய்லாக’’ ரஜினிகாந்த் நிற்கும் காட்சியையும் மோகன்பாபு வெளியிட, அந்த வீடியோதான், இப்போது தெலுங்கு தேசத்தில், ‘டாக் ஆஃப் தி டவுன்’’.:’நாட்டாமை’யை பார்த்த ரஜினிகாந்த், தனது நீண்டகால நண்பர் மோகன்பாபுவை போனில் அழைத்து, ’நாட்டாமை’’ படத்தைப் பார்க்குமாறு கூறியதையும், ஆர்.பி.சவுத்ரியிடம் பேசி ‘நாட்டாமையை’’ தெலுங்கில் ரீ. மேக் ‘ செய்யும் உரிமையைப் பெற்றுத்தர உதவியதையும், மோகன்பாபு நினைவு கூர்ந்துள்ளார்.
பெத்தராயுடு படத்தை எடுத்த சமயத்தில் மோகன்பாபு பொருளாதார நெருக்கடியில் இருந்ததையும் அப்போது ரஜினிகாந்த், 45 லட்சம் ரூபாய் மோகன்பாபுக்குக் கொடுத்து உதவியதையும் அங்குள்ள ஊடகங்கள் நேற்று நினைவு கூர்ந்துள்ளன.