சென்னை:

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான மறைந்த ராஜீவ்காந்தியின் 28-வது ஆண்டு நினைவு தினம் நாளை நாடு முழுவதும் அணுசரிக்கப்பட்ட உள்ளது. இதைமுன்னிட்டு, நாளை மாலை தமிழகம் முழுவதும்காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர்  கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேறறு தமிழக காங்கிரஸ் கட்சி தலைமையகமான  சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இதில்,  முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் 28வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 21ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனை   தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில்,  மாவட்ட தலைவர்கள் திரு கராத்தே தியாகராஜன், திரு சிவராஜ சேகரன், திரு வீரபாண்டியன் மற்றும் மாநில நிர்வாகிகள், அணிகளின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து  தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, 21-ந் தேதி(நாளை) தமிழகம் முழுவதும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடக்கிறது. இந்த அமைதி ஊர்வலத்தின் இறுதியில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

தமிழக காங்கிரஸ் கட்சி வடசென்னை, தென்சென்னை, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு மாவட்டங்கள் சார்பில் சென்னையில் நடைபெறும் நினைவுநாள் நிகழ்ச்சியில் நானும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர்கள் சஞ்சய்தத், சிரிவல்ல பிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், எம்.கிரு‌‌ஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்பார்கள்.

மாவட்டங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில், தமிழக காங்கிரஸ் சிறப்பு பிரதிநிதிகளும் பங்கேற்க இருக்கிறார்கள். அதன்படி திருச்சியில் ப.சிதம்பரம், மதுரையில் கே.ஆர்.ராமசாமி, வேலூரில் கே.வி.தங்கபாலு, தேனியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காஞ்சிபுரத்தில் சு.திருநாவுக்கரசர், கன்னியாகுமரியில் எச்.வசந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.