சென்னை:

ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நளினி, தன்னை விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பான விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது,  சிறையில் உள்ள நளினியை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என்று கூறி  மனுவை தள்ளுபடி  செய்வதாக சென்னை உயர்நீதி மன்றம் கூறி உள்ளது.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் நளினி கோரிக்கை நிராகரிக்கப்படு வதாக கூறப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக கடந்த 25 வருடங்களுக்கும்  மேலாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு கடந்த 2014-ம் வருடம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில், 20 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவு செய்தவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையின் அடிப்படையில், தன்னையும் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில்  கடந்த 2015-ம் வருடம் நளினி வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கின்பேது, தமிழக அரசு நிலை குறித்து அட்வகேட் ஜெனரல் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

அதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவில், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தமிழக அரசால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை‘ என்று கூறினார். அதைத் தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை தள்ளி வைப்பதாக அறிவித்த உயர்நீதி மன்றம் ஏப்ரல் 27ந்தேதி தீர்ப்பு கூறப்படும் என கூறியது.

அதையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

இது தொடர்பான வழுககு  உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் நளினி கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.