சென்னை:

மிழகம் வந்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், எல்லை பாதுகாப்பு படையின் ஐ.சி.ஜி.எஸ் வாராஹா அதிநவீன ரோந்து கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக எந்த அச்சுறுத்தல் வந்தாலும், அதை சந்திக்க தயார் என்று கூறினார்.

நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது  ஐ.சி.ஜி.எஸ். வராஹா என்ற ரோந்து கப்பல். நவீன வசதி களுடன் கூடிய இந்த ரோந்து கப்பல் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த கப்பலில், தொலைதொடர்புக்கான அதிநவீன உபகரணங்கள் உள்ளன. அதிக பட்சமாக மணிக்கு 48 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த கப்பல், ஒரு முறை எரிபொருள் நிரப்பப்பட்டால், 9 ஆயிரத்து 260 கிலோ மீட்டர் வரையில் பயணிக்கும். அத்துடன் இந்த கப்பலில்  30 எம்.எம். மற்றும் 12.7 எம்.எம். ரக துப்பாக்கிகள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும்,  இலக்கை குறி வைப்பதற்கும், சரியாக இலக்கை தாக்குவதற்கும் பயன்படும் FCS எனப்படும் கட்டுப்பாட்டு அமைப்பு, அந்த துப்பாக்கிகளில் உள்ளது.

இநத ரோந்து கப்பலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி  சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய கடலோர காவல் படை பொது இயக்குநர் கிருஷ்ணசாமி நடராஜன், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டனர்.

வாராஹா கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த ராஜ்நாத் சிங் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார். அப்போது, கர்நாடகாவின் மங்களூரு துறைமுகம் முதல் தமிழகத்தின்  கன்னியாகுமரி வரையிலான கடற்பரப்பில் வராஹா கப்பல், ரோந்துப் பணியில் ஈடுபடும் என்றார்.

கடல்வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கவும்,  தீவிரவாத தடுப்பு, கடத்தல் தடுப்பு, சர்வதேச கடல் விதிகள் அமலாக்கச் சவால்களை வராஹா எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சி முடிவடைந்தவுடன் வராஹா கப்பலுக்குள் சென்று பார்வையிட்டார். அவருடன் தமிழக  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் பார்வை யிட்டனர்.

சென்னை அருகே உள்ள  காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டீ கப்பல் கட்டும் தளத்தில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது தான் வராஹா என்ற ரோந்து கப்பல்.

விஷ்ணுவின் அவதாரமான வாராஹா அவதாரத்தை குறிக்கும் நோக்கில், இந்த ரோந்து கப்பலுக்கு வராஹா என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங்கிடம், ஆளில்லா விமானங்கள் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர் எந்த ஒரு அச்சுறுத்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயார் என்று கூறினார்.