டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை கூடியது.  மாநிலங்களவை காலை நேரத்திலும், மக்களவை மாலையிலும் கூட திட்டமிடப்பட்டு இருந்துது.  அதன்படி,  காலை மாநிலங்களவை கூடியதும் காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையின் மைப்பகுதிக்கு சென்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு இதற்கான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்  முழக்கமிட்டனர்.

அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, முதல் நாளிலேயே கடுமையான நடவடிக்கைகளை தாம் எடுக்க விரும்பவில்லை என்றார். ஆனாலும் அவையில் அமளி ஏற்பட்டதால் அவையானது 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து, 11 மணிக்கு அவை கூடியதும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசுகையில்,  பெட்ரால் விலை 100 ரூபாயை தொட்டு விட்டது. டீசல் விலை 80 ரூபாய்க்கு அதிகமாக விற்கிறது. சமையல் கேஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி மூலம் நாடுமுழுவதும் 21 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதனை கணிசமாக குறைத்தாலே பெட்ரோல், டீசல் விலை குறையும் என்றார்.

இதையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பெட்ரால், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். அதனால் அவையில் அமளி ஏற்பட நண்பகல் 1 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் அவை கூடியதும் அமளி நீடிக்க மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நாளை காலை 11 மணிக்கு மீண்டும் அவை கூடுகிறது.