பைனான்ஸ் சிக்கலால் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ‘அயலான்’ படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கியது.

ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீதி சிங், இஷா கோபிகர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்தப் படத்தை 24 ஏ.எம். நிறுவனம் தயாரித்து வந்தது.

இதனிடையே, ‘அயலான்’ படக்குழுவினர் மீண்டும் படப்பிடிப்புக்காக ரகுல் ப்ரீத் சிங்கிடம் தேதிகள் கேட்டதாகவும், கொரோனாவைக் காரணம் காட்டி அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுப்பதாகவும், அதனால் படத்திலிருந்து அவரை வெளியேற்ற படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் வதந்தி பரவியது.

அதற்கு இயக்குநர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ரகுல் ப்ரீத் சிங் தனது ட்விட்டர் பதிவில், இப்போது யார் படப்பிடிப்பு நடத்துகிறார்கள் என்று என்னிடம் சொல்லுங்கள். நான் படப்பிடிப்புக்கு செல்ல மிகவும் ஆவலாக உள்ளேன் என்றும், வதந்தி பரப்புவோருக்கு காட்டமாகவும் பதிலளித்துள்ளார்.