அகிலேஷ் – முலாயம் – ராம்கோபால் யாதவ்

பாட்னா,

உ.பி. முதல்வர் அகிலேஷை ஒருவர் தூண்டி விடுகிறார். அதன் காரணமாகத்தான் கட்சிக்குள் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டது என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் கூறினார்.

மார்ச் மாதம் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி, வேட்பாளர்கள் அறிவிப்பில் ஏற்பட்ட மோதல் காரணமாக தந்தை மகனுக்கும் இடையே கட்சியை யார் கைப்பற்றுவது என்று பகிரங்க மாக மோதிக்கொண்டனர்.

இதன் காரணமாக இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் கட்சியை விட்டு நீக்கி அறிக்கை விட்டனர். இதன் காரணமாக கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து சமாஜ்வாதி கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னத்தை  யார் கைப்பற்றுவது என்று இருவருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் டெல்லி சென்று  தேர்தல் அதிகாரிகளைச் சந்தித்த முலாயம்சிங் யாதவ், சைக்கிள் சின்னம் தொடர்பாக சில முக்கிய கோரிக்கைகளை முன் வைத்ததாகத் தெரிகிறது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் முலாயம் கூறியதாவது,

உ.பி.யில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு ஒருவர்தான் காரணம். அவர்  தனது மகன் அகிலேஷ் யாதவை தூண்டிவிடுகிறார் என்று கூறினார்.

முலாயம் சிங் கூறிய அந்த ஒருவர், ராம்கோபால் யாதவ் என்று  பெயரை குறிப்பிடாமல் குற்றம் சாட்டினார். மேலும், அகிலேஷ்யாதவுடன் தனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராம்கோபால் யாதவை, நாடாளுமன்ற கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மாநிலங்களவை தலைவர் அமீது அன்சாரியிடம் முலாயம்சிங் யாதவ் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.