அயோத்தி : வழக்கு நடத்திய இஸ்லாமியருக்குப் பூமி பூஜைக்கு அழைப்பு.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி முதலில் வழக்கு தொடர்ந்தவர், ஹாசிம் அன்சாரி. தனது 95வது வயதில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஹாசிம் இறந்ததால், அந்த வழக்கை அவர் மகன் இக்பால் அன்சாரி தொடர்ந்து நடத்தி வந்தார்.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ‘அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம்’’ எனத் தீர்ப்பளித்தது.

இதையடுத்து அங்கு ராமர் கோயில் கட்டுவதற்கு நாளை ( புதன் கிழமை).பூமி பூஜை நடக்கிறது. பிரதமர் மோடி, இதனைத் தொடங்கி வைக்கிறார்.

பூமி பூஜையில் கலந்து கொள்ளுமாறு, நீதிமன்றத்தில் வழக்கு நடத்திய இக்பால் அன்சாரிக்கு , கோயிலைக் கட்டும்  அறக்கட்டளை அழைப்பிதழ் அனுப்பி உள்ளது.

‘’அயோத்தி நிலம் தொடர்பான தாவா முடிந்து விட்டது. இனிமேல் அயோத்தி வளர்ச்சி அடைய வேண்டும். பூமி பூஜையில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பிதழ் வந்துள்ளது, நான் பெருமை கொள்கிறேன்.

நிச்சயம் பூமி பூஜையில் கலந்து கொள்வேன். விழாவுக்கு வரும் பிரதமர் மோடியைச் சந்திப்பேன். அவருக்குப் பரிசு வழங்குவேன்.ராமர் கோயில், அயோத்தியின் முகத்தை மாற்றும், எங்கள் குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்’’ என்று உணர்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார், அழைப்பைப் பெற்றுள்ள இக்பால்

‘’இந்த விழாவில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்பது ராம பிரானின் விருப்பம் போலும்’’ என்றும்  நெகிழ்ச்சியுடன் சொல்கிறார், இக்பால் அன்சாரி..

-பா.பாரதி.