பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் வாகனங்களுக்கான வழித்தடங்களை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. தேவர் ஜெயந்திக்காக ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வந்து செல்லும் வெளிமாவட்ட வாகனங்களுக்கான வழித்தடம் அறிவிக்கப்படுவதும் வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வழித்தடங்கள் அடங்கிய அறிக்கையை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, ”திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக செல்ல வேண்டும். இந்த மாவட்ட வாகனங்கள் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக ராமநாதபுரம் வரக்கூடாது.

சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்ட வாகனங்கள் திருச்சி, மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியில் திரும்பி செல்ல வேண்டும்.

கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட வாகனங்கள் திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பிச் செல்ல வேண்டும். மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக செல்ல வேண்டும்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, மண்டபசாலை, க.விலக்கு, கண்ணார்பட்டி, கமுதி வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக செல்ல வேண்டும். அல்லது தூத்துக்குடி, சூரங்குடி, சாயல்குடி, கோவிலாங்குளம், கமுதி வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக செல்ல வேண்டும். விருதுநகர் மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, மண்டபசாலை, க.விலக்கு, கண்ணார்பட்டி, கமுதி வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக செல்ல வேண்டும்.

சிவகங்கை மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள் மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பிச் செல்ல வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.