மாவட்டத்திற்கான உரிமையின் படி வைகை அணை நீர் பெறப்படும் என்று பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மற்றும் நகர் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், எம்.எல்.ஏ சதன் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, ஆணையாளர் நாகராஜன் முன்னிலை வகிக்க, பொறியாளர் வரதராஜன் வரவேற்று பேசினார். அதனை தொடர்ந்து அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எம்.ஏ முனியசாமி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். பின்னர் நகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் எம்.எல்.ஏ சதன் பிரபாகர் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், “பரமக்குடி நகராட்சி முதல்நிலை மற்றும் முன் மாதிரியான நகராட்சியாக திகழ்கிறது. அந்த நிலை தொடர வேண்டும். மக்கள் பணியையும், வளர்ச்சி திட்ட பணிகளையும் சிறப்பாக மேற்கொள்ள அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அ.தி.மு.க ஆட்சி தொடர வேண்டும். அரசின் திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று விரும்பி மக்கள் வாக்களித்துள்ளனர். பொதுமக்கள் அ.தி.மு.க அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் தேவைகளை நிறைவேற்ற அனைவரும் நல்ல முறையில் பணியாற்ற வேண்டும்” என்று கூறினார்.

இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ சதன் பிரபாகர், “பரமக்குடி தொகுதி முழுவதும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, அனைத்து கிராமங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காவிரி கூட்டு குடிநீர், தங்கு தடையின்றி முழுமையாக அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க செய்வேன். பரமக்குடி வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். வைகை கரையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் சாலையில், மின் விளக்குகள் அமைக்கப்படும்.

நகராட்சியின் மூலம் புதிதாக 2 மேல்நிலை தொட்டிகள் அமைக்கப்பட்டு, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நமது மாவட்டத்திற்கான உரிமையின் படி ஆண்டுதோறும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதி மக்கள் தங்கள் குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்து நிவர்த்தி செய்து பயன்பெறலாம்” என்று தெரிவித்தார்.