ராமண்ணா பதில்கள்:

ராமண்ணா
ராமண்ணா

கன்னியாகுமரி – குமரி, தஞ்சாவூர் – தஞ்சை.  ஆனால்,  “சென்னை – மெட்ராஸ்… “ இரண்டுக்கும் தொடர்பே இல்லையே!
ஆர். மதி, மதுரை
முன்பு இந்த பகுதி,  “தாமர்லா வெங்கடாத்ரி நாயக்கர்”  என்பவருக்குச் சொந்தமாக இருந்தது.  கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் இந்தியாவில் காலூன்ற துவங்கிய நிலையில், தங்களக்கு கோட்டை கட்ட இடம் வேண்டுமென்ற இந்த தாமர்லா வெங்கடத்ரி நாயக்கரிடம்தான் கேட்டார்கள்.  அவரும் கொடுத்தார். அந்த இடத்தில்தான் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் கோட்டை கட்டினர். (அந்த கோட்டைதான் தற்போது சட்டமன்றமாக செயல்படுகிறது.)
இடத்தைக் கொடுத்த த.வெ. நாயக்கர்,  “நான் அளித்த பகுதியில் நகர் உருவாகப்போவது மகிழ்ச்சி.  அந்த ஊருக்கு  என் அப்பாவின் பெயரான “தாமர்லா சென்னப்ப நாயக்கர்”  என்பதை அடிப்படையாகக்கொண்டு    “முத்துராஜா சென்னப்பட்டினம் “ என்று  பெயர் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதற்கு ஆங்கிலேயர்கள் ஒப்புக் கொண்டு வைத்த பெயர்கள்தான், மெட்ராஸ் மற்றும் சென்னை.
அதாவது, “முத்துராஜா” என்பதில் இருந்து  “ மெட்ராஸ் “ மற்றும் சென்னப்பட்டினத்தில் இருந்து “ சென்னை “
உங்க சந்தேகம் தீர்ந்ததா?
வினுப்பிரியா
வினுப்பிரியா

சமீபத்தில் உங்களை வேதனைப்பட வைத்த விஷயம்?
பி. சுஜாதா, கோவை
சேலம் வினுப்பிரியா தற்கொலையில்யில்  ஒரு முக்கியமான விஷயம் மிக மிக வேதனைப்பட வைத்தது.
அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்தவன்,  அப் பெண்ணின் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து பேஸ்புக்கில் வெளியிட்டது… 
அந்த படத்தை நீக்க காவல்துறை உயரதிகாரிகளை அணுகியபோது, பொறுப்பை தட்டிக்கழித்தது…  கீழ்மட்ட அதிகாரிகள் அதற்காக லஞ்சம் வாங்கியது…  இது எல்லாமே கண்டிக்க, தண்டிக்கப்பட வேண்டிய விஷயம் தான்.
அதே நேரம் வினுப்பிரியாவின் கடிதத்தில் இருந்த ஒரு முக்கியமான வரியை யாரும் கவனிக்கவில்லை.
“என்னை என் பெற்றோரே நம்பவில்லை” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் வினுப்பிரியா.
இது எவ்வளவு கொடுமையான விஷயம்?
வினுப்பிரியாவுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய பெற்றோரே அவரை சந்தேகப்பட்டிருக்கிறார்கள்.  தாய் தகப்பனே  நம்பவில்லை என்றால் ஒரு மகள் வேறு எங்குபோய் தனக்கு பரிகாரம் தேடுவார்?
மிக வேதனைப்படவைத்தது இதுதான்.
 
ராம்குமார்
ராம்குமார்

ராம்குமார்தான் குற்றவாளியா?
மூர்த்தி, ஈரோடு.
இதுவரை வரும் தகவல்களைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. அதே நேரம், ராம்குமார் மட்டும்தான் குற்றவாளியா என்கிற கேள்வியும் எழுகிறது.
நியூஸ்பாண்ட்
நியூஸ்பாண்ட்

பரபரப்பான அரசியல் செய்திகளை அளித்து வந்த நியூஸ்பாண்ட் எங்கே போனார்… ?
ராம்குமார் சோமசுந்தரம், சிங்கை.
நீண்ட ஃபாரின் ட்ரிப் முடிந்து நேற்றுதான் திரும்பியிருக்கிறார்.  இனி அடிக்கடி வருவார்.  அவர் என்னிடம் சொன்ன ஒரு தகவலை உங்களுக்குச் சொல்கிறேன்.
பொதுத்தேர்தலே இடைத்தேர்தலாக மாறிப்போன அந்த் தொகுதியில் முக்கிய கட்சிகளைச் சேர்ந்த இரு வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்யலாமா என்ற ஆலோசனை  நடத்துகிறதாம், தேர்தலுக்கு பொறுப்பான கமிஷன்.  இந்தத் தகவல் அறிந்த முக்கிய கட்சிகள் இரண்டும் மாற்று வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இருக்கின்றன.  ஆளுங்கட்சியில் இன்னும் முடிவெடுக்கவில்லை எதிர்க்கட்சி சார்பாக பிரபல பெண் கவிஞர் நிறுத்தப்படுவார் என்று பேசப்படுகிறது.
 
கடைசி கடிதம்
கடைசி கடிதம்

“மெல்லத்தமிழினி சாகும்” என்பது நடந்துவிடுமோ?
சுரேஷ், தஞ்சை
இளைய தலைமுறையப் பொறுத்தவரை ஏற்கெனவே தமிழ் செத்துவிட்டது. சமீபத்தல் தற்கொலை செய்துகொண்ட சேலம் வினுப்பிரியாவின் கடைசி நேர கடிதததைப் பாருங்கள். அந்த நேரத்தில் எத்தனை உணர்ச்சிகரமாக இருந்திருப்பார்.. மனதில் எத்தனை எத்தனை எண்ணங்கள் தோன்றியிருக்கும்.. அதை எளிய தமிழில் எழுத முடியவில்லை அந்தப் பெண்ணால்.  இதே போலத்தான் சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியாவும் ஆங்கித்தில் கடிதம் எழுதிவைத்திருந்தார்.
இதுபோன்ற மரணங்கள் அளிக்கும் வேதனை ஒருபுறம். அதே நேரம், தங்கள் உணர்ச்சிகளைக்கூட தாய்மொழியில் கொட்டமுடியாத நிலை இன்றைய இளையோருக்கு.
ஆங்கிலம்தான் அவர்களுக்கு வருகிறது. அதுவும் ம் ஒழுங்கான ஆங்கிலம் அல்ல. ஆங்கல எழுத்துக்களைக்கொண்டு தமிழாங்கிலத்தில்  எழுதுகிறார்கள்.
“naan sagaren”  என்று அவர்கள் எழுதியைத் படிக்கம்போது, தமிழும் சேர்ந்து செத்துவிட்டதை நினைத்து துக்கம் இரட்டிப்பாகிறது.
( கேள்விகளை பேஸ்புக்  patrikai.com  பக்கத்தில் தனிச் செய்தியில் அனுப்பலாம்!)