விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள உளுந்தூர்பேட்டை ஆட்டு சந்தையில் ரம்ஜான் பண்டிகை வருவதை முன்னிட்டு 2 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வரும் 26ந்தேதி (திங்கட்கிழமை) நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜானுக்காக இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், ரம்ராஜன் பண்டிகையை கொண்டாட இஸ்லாமிய மக்கள் தயாராகி வருகின்றனர். இதன் காரணமாக  தமிழகம் முழுவதும் உள்ள ஆட்டுச் சந்தை கள் களைகட்டி உள்ளன.

விழுப்புரம் அருகே உள்ள உளுந்தூர்பேட்டை ஆட்டுச்சந்தையில் இந்த வாரம் ஆடுகளின் விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. இந்த வாரம் சுமார்  ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆடுகளை வாங்க மினி லாரி உள்ளிட்ட வாகனங்களில் வியாபாரிகள் வந்ததால் உளுந்தூர் பேட்டை-சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தற்போது மத்திய அரசு ஆடு மாறுகளை இறைச்சிக்காக விற்கப்படுவது தடை செய்துள்ள நிலை யில், இந்த ஆண்டு ஆடுகளின் விற்பனை இரண்டு மடங்காக விற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.